தனிமைப்பயணம்

இதே சாலையில்
முடிவிலி காலமாகப் பயணிக்கிறேன்
அகன்ற சாலையின்
இரு மருங்கிலும் வெறுமை
ஆளரவமில்லை
கண்ணுக்கெட்டிய தூரமெங்கும்
வறண்ட பூமி
நெடிய தனிமை சூழ
நேர்ப்பாதையிலேயே
செல்ல வேண்டும்
நெடுஞ்சாலையில்
அந்தச் சிறு திருப்பம்
எங்கு வரும்?
மரங்கள் மறைத்திருக்கும் அத்திருப்பத்தில் என்றோ நுழைந்த ஞாபகம்!
குறுகிய சந்து அது
மரங்களிலெல்லாம் பல விதப் பூக்கள்
சந்தெல்லாம் கனிகள் விழுந்து உருளும்
பறவைகள் சத்தமிடும்
திரும்பிய சந்து விரைவில்
நெடுஞ்சாலையில் வந்து முடிந்துவிடும்
திரும்பச் சந்துக்குள் திரும்பிச் சென்றுவிட
எடுத்த முயற்சிகள் வியர்த்தம்
முன்னோக்கி மட்டுமே செல்லும்
வாகனத்தை யார் வடிவமைத்ததோ!
கண் கூசும் வெயிலில்
வியர்வையில் நனைந்து
சென்றவாரிருக்கிறேன்
வியர்வைத்துளி கண்ணுக்குள் வீழ்ந்து
பார்வையை மறைக்கும் கணங்களில்
மரங்கள் மூடிய
ஆயிரமாயிரம் திருப்பங்கள்
இருமருங்கிலும் சென்றிருக்கலாம்!
வாகனத்தின் ஒலி மட்டுமே
துணை வர
நீண்டுகொண்டிருக்கும் சாலையில்
பசுமைத் திருப்பங்களின் தேடலில்
ஒரு தனிமைப்பயணம்

இப்னு ருஷ்த்

எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் ஒரு நேர்காணல் வாயிலாகத்தான் முதன்முதலாக இப்னு ருஷ்த் பற்றி நான் அறிந்தேன். எழுத்தாளர் சல்மான் ருஷ்டி சொன்னார் : “குடும்பப் பெயரை ருஷ்டி என்று மாற்றுமளவிற்கு எனது தந்தை இப்னு ருஷ்தின் தத்துவத்தை வெகுவாகப் போற்றினார். என் தந்தை ஏன் அவர் மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார் என்பதை நான் பின்னர் உணர்ந்தேன். இஸ்லாமிய கலாச்சாரத்திற்குள் நம்பமுடியாத அளவிற்கு நவீனமயமாக்கும் குரலாக இருந்தார் ருஷ்த்”

Ibn Rushd (1126 – 1198)

அவெரோஸ் என்றும் அழைக்கப்படும் இப்னு ருஷ்த், இடைக்கால அண்டலூசியாவில் வாழ்ந்த இஸ்லாமிய தத்துவஞானி, சட்ட நிபுணர் மற்றும் மருத்துவர். அவருடைய படைப்புகள் இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய சிந்தனைகள் இரண்டிலும், குறிப்பாக தத்துவம் மற்றும் இறையியல் துறைகளில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்பெயினின் கோர்டோபாவில் 1126 இல் பிறந்த இப்னு ருஷ்தின் அறிவுசார் பங்களிப்புகள் அரிஸ்டாட்டிலியன் தத்துவம், இஸ்லாமிய நீதியியல் மற்றும் மருத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியவை.

அரிஸ்டாட்டிலின் படைப்புகள் பற்றிய அவரது விளக்கங்கள் இப்னு ருஷ்தின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும். அரிஸ்டாட்டிலின் “மெட்டாபிசிக்ஸ்” மற்றும் “இயற்பியல்” பற்றிய அவரது விளக்கங்கள் ஐரோப்பிய கல்விமான்களிடையே செல்வாக்கு பெற்றவை. அவை முந்தைய இஸ்லாமிய தத்துவஞானிகளின் விளக்கங்களிலிருந்து வேறுபட்டு அரிஸ்டாட்டிலின் கருத்துகளுக்கு ஒரு புதிய விளக்கங்களை அளித்தன.

இப்னு ருஷ்த் இஸ்லாமிய நீதியியல் பற்றியும் விரிவாக எழுதினார். அரிஸ்டாட்டிலின் போதனைகளை இஸ்லாமிய இறையியலுடன் ஒப்பிட்டார் . “The Decisive Treatise” என்று அறியப்படும் நீதித்துறை பற்றிய அவரது பணி தத்துவத்திற்கும் மதத்திற்கும் இடையிலான உறவை எடுத்துரைத்தது. இந்நூலில் தத்துவமும் மதமும் இணக்கமாக இருக்க முடியும் என்று அவர் வாதிட்டார்.

அரிஸ்டாட்டிலிய இயற்பியலின் சிக்கலான வாதத்தின் மூலம் கடவுளின் இருப்பை நிரூபிக்க முடியும் என்று இபின் ருஷ்த் நம்புகிறார். இது ஒரு முதல் காரணத்தை நிறுவுகிறது. பொதுவாக இயற்பியல் வாதங்களைப் போலவே, வாதமும் ஒரு அடையாளமே (தலீல்), இது உலகின் அனுபவ அம்சங்களில் இருந்து தொடங்குகிறது. அவை காரண ரீதியாக பின்னால் இருந்தாலும் நம்மால் நன்கு தெரிந்து கொள்ளும்படியாக உள்ளன.

இப்னு சினா மற்றும் அஷ்அரைட் இறையியலாளர்களின் முன்னோடி மீப்பொருண்மை வாதங்களை அவர் நிராகரிக்கிறார். இவையனைத்தும் நிரூபணமாக குறைவுபட்டது மட்டுமல்லாமல், சாதாரணர் புரிந்து கொள்ளும், ஏற்கும் வகையிலும் இல்லை என்று நினைக்கிறார். கடவுள் ஒரு திறமையான காரணமாக (efficient cause) அல்ல, ஆனால் இறுதி மற்றும் முறையான காரணமாக பணியாற்றுகிறார் என்று இப்னு ருஷ்த் கூறுகிறார். நிஜத்தில் நகரும் வானசோதிகள் (Moving Bodies) மற்றொரு வானசோதியை அதன் ஆற்றல் நிலையிலிருந்து உண்மையான இயக்கத்திற்கு நகர்த்தும்போது திறமையான காரணத்தன்மை நிலவுகிறது. பரலோக காயம் ஏற்கனவே நித்தியமானதாக உள்ளதால் பரத்தின் களத்தில் திறமையான காரணத்திற்கு இடமில்லை. ஆகாயக் கோளங்களுடனான முதல் காரணத்தின் உறவு அறிவுக்குப் புலனாகும் – அதாவது, முதல் காரணத்தின் நித்திய எண்ணம் அறிவை ஊக்குவிக்கும் இறுதி காரணங்களாக செயல்படும் வடிவமாகும். “காலஞ்சேர்ந்தவை முற்றிலும் நித்தியமானதிலிருந்து முன்னெடுக்க முடியாதவை. அதன் பொருளில் அவை நித்தியமானவை என்றாலும் அதன் இயக்கங்களில் தற்காலிகமானவை” அறிவுயிர்களுக்கு மத்தியில் கடவுளுக்கு மட்டுமே இறுதிக் காரணமாக செயல்படக்கூடிய அறிவுசார் சிந்தனைக்கு வேறு இலக்கு இருக்க முடியாது. மாறாக, “முதல் வடிவம் தனக்கு வெளியே எதையும் நினைக்காது”. இது கடவுளின் தனித்துவமான எளிமையை ஒரு தூய மனதாகக் கணக்கிட உதவுகிறது, எப்போதும் கடவுளைத் தவிர வேறு எதனாலும் முழுமையாக உணரப்படாததாக அது இருப்பதாக விளக்குகிறது. ஆனால் – கடவுள் படைத்த உலகம் பற்றிய அறிவுணர்வு பற்றிய கேள்விகளுக்கு இது வழிவகுக்கிறது. கடவுள் கருத்தாக்கத்தைப் பற்றிய “மிகவும் வலிமையான சந்தேகம்” இதுவாகும். “கடவுளுக்கு விவரங்கள் தெரியாது” என்ற பார்வை தான் “மதக்கருத்துக்கு எதிரானவர் இப்னு ருஷ்த்” என்று அல் கஸாலியால் முத்திரை குத்த வைத்தது. இந்த அனுமானத்தை அசை போடுவதாகவும் இது குறித்து உறுதியாக இருப்பதை இப்னு ருஷ்த் மறுக்கிறார். கடவுள் தான் படைத்த உலகம் பற்றிய அறிவை தனக்கே உரிய முறையில் கொண்டிருக்கிறார் என்றும், பொதுமையாகவோ தனிப்பட்டதாகவோ இல்லாமல், உலகத்தால் ஏற்படுவது போல் அல்லாமல், உலகத்தின் காரணங்களாக அவருடைய எண்ணங்கள் விளைகின்றன. (I want to know God’s thoughts, rest are details என்று ஐன்ஸ்டைன் சொன்ன வாக்கியம் நினைவுக்கு வருகிறது). தெய்வீக மனம் “தன் சுயத்தை நினைப்பது அனைத்து இருப்பினுடைய அதன் சிந்தனையை ஒத்ததாக இருக்கிறது”.

முஸ்லீம் சூழலில் இப்னு ருஷ்தின் செல்வாக்கு இப்னு சினாவின் பெரும் செல்வாக்குடன் ஒப்பிட முடியாதது, அல்லது ஐரோப்பாவில் இப்னு ருஷ்தின் சொந்த செல்வாக்குடன் கூட ஒப்பிட முடியாதது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இஸ்லாமிய சிந்தனையில் அவருக்கு எந்த தாக்கமும் இல்லை என்னும் கூற்று தவறானது. இப்னு சினா, அல்-கஸாலியைப் போலல்லாமல் இப்னு ருஷ்த் சுயசரிதை எழுதவில்லை என்பதால் அவரது வாழ்க்கையின் பல அம்சங்கள் தெளிவாவதில்லை. இப்னு ருஷ்தின் கருத்துக்கள் இஸ்லாமிய உலகில் சர்ச்சையை ஏற்படுத்தின என்பது உண்மைதான். ஆனாலும், அவரது படைப்புகள் இஸ்லாமிய உலகிலும் மற்றும் மேற்குலகிலும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு போற்றப்பட்டன. கிளாசிக்கல் கிரேக்க சிந்தனையை இடைக்கால ஐரோப்பாவிற்கு கடத்துவதில் ஒரு முக்கிய நபராக ருஷ்த் கருதப்படுகிறார்.

ரம்ஜான்போஸ்ட் – 23.1.2024

ஈஸ்வரன்

காசி நஸ்ருல் இஸ்லாம் – இந்த மகாகவிஞன் எந்தச் சிமிழிலும் அடங்காதவன். இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தீவிரவாதி. ஐநூறுக்கும் மேலான இந்து பஜன்களை இயற்றியவன். மகன்களுக்கும் மகளுக்கும் இந்து-முஸ்லீம் பெயர்களை இணைத்துச் சூட்டியவன். மூத்த மகனுக்கிட்ட பெயர் – கிருஷ்ண முகம்மது. வங்கதேசத்தின் தேசிய கவி. துர்காபூர் விமான நிலையத்துக்கு இவன் பேர் சூட்டப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கமும் வங்க தேசமும் போட்டியிட்டு இவனைச் சொந்தம் கொண்டாடுகின்றன. மகனும் மகளும் டாக்கா சென்று சேர்வதற்குள் கவிஞன் அடக்கம் செய்யப்பட்டு விட, அவனுடைய புதைக்கப்பட்ட தகனப்பெட்டியை மீண்டும் தோண்டியெடுத்து இந்தியாவுக்கு கொண்டு வந்து புதைக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கரடுமுரடான நஸ்ருல் இஸ்லாமின் கவிதைகளின் அழகியல் குருதேவ் தாகூரின் அதிநவீன பாணியுடன் ஒப்பிடுகையில் தனித்துவமானது. நவீன வங்க மொழியில் சமஸ்கிருதமயமான சொற்களை பயன்படுத்தி வந்த காலத்தில் பர்சிய-அரபு மூலச்சொற்களை பயன்படுத்துகிறான் என்பதால் இவன் பெயரைக் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சனம் செய்தார் குருதேவ் ரவீந்திரர். “கூன்” (ரத்தம்) எனும் பர்சிய மூலச் சொல்லை இஸ்லாம் பயன்படுத்தியதால் விளைந்த மிகப்பெரிய இலக்கியச் சண்டை இது. “ரக்தோ”(ரத்தம்) என்ற சொல்லை ஏன் பயன்படுத்தவில்லை என்று வங்க இலக்கிய உலகமே இரண்டு பட்டது. 1941இல் ரவீந்திரர் மறைந்த போது கண்ணீர் விட்டு அழுதான். செயலாற்றிய இருபதாண்டுகளில் எண்ணற்ற கவிதைகளை பாடல்களை கட்டுரைகளை எழுதிக் குவித்தான். தன்னுடைய பாடல்களுக்கு தானே இசையமைத்து கிராமபோன் ரிகார்டுகளை HMV நிறுவனம் மூலமாக கொண்டு வந்தான். வங்காள மொழியின் திரைப்படம் இயக்கிய முதல் முஸ்லீம் இயக்குனராகவும் திகழ்ந்தான். தாகூர் இறந்த ஓராண்டில் இஸ்லாமை ஒரு வித நோய் பீடித்தது. ஐம்பதுகளை மனநோய் மருத்துவமனையில் கழித்தான். பின்னாளில் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்ற போது இந்தியாவில் அவனுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று ஐரோப்பிய மருத்துவர்கள் தெரிவித்தனர். நோயிலிருந்து மீளாமல் 1976 வரை வாழ்ந்தான். 1972இல் வங்கதேசம் தனி நாடான போது புது அரசு டாக்காவுக்கு அழைத்துச் சென்று அவனைப் பார்த்துக் கொண்டது.வங்க தேசத்தின் தேசிய கவி என்றும் அறிவித்தது.

ஈஸ்வரன்

இறைவனுக்காக
வானையும் மண்ணையும்
தேய்த்துப் பார்ப்பவன் யார்?
மலையுச்சிகளில் ஏறியும்
காடுகளில் உலவியும்
திரிந்து கொண்டிருக்கும் நீ யார், துறவியே!
புதையலை உன் மார்பில் கட்டிக்கொண்டு
அதனை அனைத்திடங்களிலும் தேடித் திரிகிறாய்
படைப்பு உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது
நீயோ உன் கண்ணைப் பொத்திக் கொண்டுள்ளாய்
படைத்தோனைத் தேடும் உன் முயற்சியில்
நீ உன்னையேதான் தேடிக் கொண்டிருக்கிறாய்
விருப்பக் குருடனே !
கண்ணைத் திற
உன் வடிவை கண்ணாடியில் பார்
அவனது நிழல்
உன் முழு வடிவிலும் வார்க்கப்பட்டிருக்கும்
வேதத்தின் அதிகாரிகள் மீது
மலைப்போ அச்சமோ கொள்ள வேண்டியதில்லை
நாயகனே!
இறைவனின் செயலர்கள் இல்லை அவர்கள்
அனைத்திலும் வெளிப்படும் அவன்
அனைத்தின் மத்தியிலும் இருக்கிறான்
நான் என்னைப் பார்க்கிறேன்
காணாத என் படைப்பாளியை
அடையாளம் கண்டுகொள்கிறேன்
கடல்-வழி வணிகர்கள்
நகை வர்த்தகம் புரிகின்றனர்
அவர்கள் நகை வணிகர்கள்
நகை செய்தவனை அறிந்தோம்
என்று பாசாங்கு செய்கிறார்கள்
முத்து விளையும் கடல்களின்
ஆழத்தில் என்றும் அவர்கள் மூழ்கியதில்லை
நூல்களை ஆராய்வதற்குப் பதிலாக,
உண்மைக் கடலில் ஆழ்ந்துவிடு நண்பனே

நந்த் ரிஷி

கஷ்மீரின் இஸ்லாமியமயமாக்கம் 14ம் நூற்றாண்டில் தொடங்கியது. இந்து-பவுத்த மக்கள் பெரும்பான்மையாக இருந்த நிலப்பரப்பு எப்படி இஸ்லாமியமயமானது என்ற கேள்விக்கான விடைகளைத் தேடிப்போனபோது கிடைத்தது – அலீ ஹம்தானி – எனும் பெயர். இரானிலிருந்து எழுநூறு சீடர்களோடு வந்து சாதாரண கஷ்மீரிகளை இஸ்லாம் பக்கம் ஈர்த்தவர் ஹம்தானி.

காஷ்மீரின் ஆளும் ஷா மிர் வம்சத்து மன்னர்களை இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைபடுத்தி முழுக்க முழுக்க கஷ்மீரை இஸ்லாமியமயமாக்க வலியுறுத்தினார். இருப்பினும், இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தும் வேகம் பற்றி மிர் சயீத் அலி ஹமதானி-க்கும் சுல்தான் குதுப் அல்-தீனுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டது. கருத்து வேறுபாடுகளைச் சரிசெய்து கொள்ள முடியாமல் சயீத் அலி ஹமதானி காஷ்மீரை விட்டு வெளியேறினார்.

இரானின் உயர் கலாச்சாரத்தை கஷ்மீர் பண்பாட்டு நிலப்பரப்பில் புகுத்த ஹம்தானிக்குப் பின் வந்த சீடர்கள் தொடர்ந்து முயன்ற போது எழுந்த மக்கள் இயக்கம் ரிஷி மரபு. இவ்வியக்கத்தின் நிறுவுனர் – நந்த் ரிஷி என்று அழைக்கப்படும் நூருத்தின் வலி. ஷேக் உல் ஆலம் எனும் சிறப்புப் பெயராலும் இவர் அறியப்படுகிறார்.

நந்த் ரிஷி காஷ்மீரிகளின் ஆன்மீக மற்றும் சமூக விவகாரங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது கவிதைகள் மற்றும் போதனைகள் பாமர மக்களை பரவலாக சேர்ந்தடைந்தன. உள்ளூர் மக்களால் நந்த் ரிஷியின் பல்வேறு பாடல் வரிகள் அன்றாட வாழ்வில் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டது. இது இன்றளவும் தொடர்கிறது. ஆன்மிகம், பக்தி, உண்மைத் தேடல் ஆகிய கருப்பொருள்களைத் தம் கவிதைகள் வாயிலாக ஆராய்ந்தார் நந்த் ரிஷி.

நந்த் ரிஷியின் சம காலத்தவர் லல்லா எனப்படும் லால் டேட். சைவ சமய சித்தரான லல்லா கஷ்மீரி மொழியின் முதல் இலக்கியவாதியும் கூட. நந்த் ரிஷி லல்லாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்றும் ரிஷியின் தாயார் லல்லாவின் நெருங்கிய தோழி என்றும் கூறப்படுகிறது. இந்து லல்லா – இஸ்லாம் நந்த் ரிஷி – இவர்கள் பற்றி ஏராளமான தொன்மைக்கு கதைகள் கஷ்மீர் மண்ணில் புழங்குகின்றன. ஆபப்ரம்ஷ – பிராகிருத மொழியை விட்டு கஷ்மீரி மொழியைப் பேசத் தொடங்கியிருந்தது கஷ்மீர். இந்து-பவுத்த சமூகத்திலிருந்து இஸ்லாம் சமயத்தின் பரவலாக்கத்தையும் கண்டு கொண்டிருந்தது பள்ளத்தாக்கு. நிலம் அதிரும் மாற்றங்களுக்கு நடுவே தூர வெளிச்சமாய் கஷ்மீரின் பண்பாட்டுத் தொடர்ச்சியை உறுதி செய்தனர் இந்த இரு ஆளுமைகள். லல்லாவின் “வாக்”, ரிஷியின் “ஷ்ருக்” – தனித்துவமிக்க வடிவங்களில் இருவரும் புனைந்த கவிதைகள் “கஷ்மீரியத்”தின் வேர்கள்!


மரணம் ஒரு சிங்கம்
எப்படி அதனிடமிருந்து தப்பிக்க முடியும்?
ஆட்டு மந்தையிலிருந்து
ஆட்டுக்குட்டியைப் போல அது உன்னைத் தூக்கிச் செல்லும்

——————————————————————

பயம், பற்று, வன்முறை எண்ணம்
நான் தவிர்த்தவை
வாழ்நாள் முழுதும்
நான் நடந்தது
ஒற்றைப்பாதை
சிந்தனையின் நீரில் குளித்து
ஆனந்தத் தனிமை எனும்
தங்குமிடம் நோக்கி நடந்தேன்

——————————————————————

முடிந்தால் பசித்தவர்க்கு உணவளி
அம்மணமானவரின் ஜாதியைக் கேட்காதே
ஆயிரம் மடங்கு அறத்தை ஆதாயமாய்ப் பெறு
அன்புச் சகோதரரே, நந்தா
அதை ஒருபோதும் இழக்க மாட்டீர்

——————————————————————

வீட்டு வாசலில்
விழிப்பில் அமர்ந்திருப்பவருக்கு
அவரது சொந்த சர்பத்தை
அவர் வழங்குவார்:
அவருடைய பக்தர்கள் வேறு யாரோ, ஆனால்
ஒரே ஒரு பிரார்த்தனையில்
அவர் ஆசீர்வதிப்பவர்,
செழிப்படைவார்

——————————————————————

என் பக்கத்தில் அவன்
அவன் பக்கத்தில் நான்
அவனுடன் ஆனந்தமாக உணர்கிறேன்
வீணில், அவனைத் தேடி எங்கோ சென்றேன்
என் நண்பனோ எனக்காக
என் வீட்டில் எழுந்தருளினான்

——————————————————————

“சிவ சிவ”வெனும் கோஷம்
சிவனை எழுப்பாது
காங்கிர் கங்குகளில் நீயிடும் நெய்யை
உட்கொண்டு வலுவாக இரு அல்லது
உனக்குத் தேவையில்லையெனில்
மற்றவர்க்குக் கொடு

——————————————————————

One of the oldest Sufi Shrine in Kashmir, dedicated to Nund Rishi – Charar e Sharif
Srinagar International Airport is named after Nund Rishi – Sheikh ul Alam Airport

திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் ஸஜ்தா

In 2014, in Iraq’s northern city of Mosul one of its most well-known shrines was destroyed by the ISIS – the Tomb of Jonah. The shrine was built on what is regarded as the burial site of the biblical prophet known in the Quran as Yunus.

நினிவே நகரம் நீண்ட காலமாக அல்லாஹ்வின் செய்தியை மறந்து சிலை வழிபாடும் பாவமும் நிறைந்த நகரமாக மாறியிருந்தது. நகரவாசிகளைத் தனது ஒளியின் பாதையில் வழிநடத்த நினிவே நகரவாசிகளுள் ஒருவராகப் பிறந்திருந்த யூனுஸ் நபியை ஒரு தூதராக அனுப்ப முடிவு செய்தான் அல்லாஹ்.

யூனுஸ் நபி உடனடியாக தனது இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றத் தொடங்கினார். தனது மக்களை அல்லாஹ்வின் பக்கம் திரும்புமாறும் சிலை வழிபாட்டைத் தவிர்க்குமாறும் அழைப்பு விடுத்தார். அவருக்கு முன் பிறந்த தீர்க்கதரிசிகள் நிராகரிக்கப்பட்டதைப் போலவே ஆனால் நினிவே மக்களால் யூனுஸும் நிராகரிக்கப்பட்டார். அல்லாஹ்வின் பயங்கர கோபத்தை அவர்களுக்கு நினைவூட்டி அவர்களை அல்லாஹ்வின் பாதைக்கு வர அழைத்தார். அவர்களோ, “நாங்களும் எங்கள் முன்னோர்களும் பல ஆண்டுகளாக இந்த தெய்வங்களை வணங்குகிறோம், இதனால் எங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை” என்றனர்.

நபி யூனுஸ் அவர்களுக்கு உதவ விரும்பினார், அதனால் தன் விடாமுயற்சியைக் கைவிடவில்லை. அவர்களின் அறியாமையைப் பரிவுடன் அணுகினார். அவர்களின் கடுமையான வார்த்தைகளைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அல்லாஹ்வின் தண்டனை குறித்து எச்சரித்தவண்ணமிருந்தார்.

மேலும் யூனுஸின் வார்த்தைகளை வெற்று அச்சுறுத்தல்களாக நினைத்து தாங்கள் சிறிதும் பயப்படவில்லை என்று தெரிவித்தனர். யூனுஸ் நபி மனம் உடைந்தார்; அவர் தனது மக்களை கைவிட்டார். தன்னை ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தை ஏற்கும் ஒரு சமூகத்தை வெகு தொலைவில் கண்டடையலாம் என்ற நம்பிக்கையில், அல்லாஹ்வின் அனுமதியின்றி, நினிவே நகரத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

நினிவேயின் அமைதியான வானம், அல்லாஹ்வின் கோபத்தைத் துப்புவதற்குத் தயாராவதுபோல் சிவப்பாக மாறியது. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் மலை உச்சியில் தங்களுக்கு மேலேயிருந்த வானத்தை பயம் நிறைந்த இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அல்லாஹ்வின் தண்டனையைப் பற்றிய யூனுஸின் எச்சரிக்கையை அவர்கள் நினைவு கூர்ந்தனர், மேலும் அவர்கள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலையைக் கண்டு அஞ்சினர். புதிய நம்பிக்கையுடன், முழங்காலில் விழுந்தனர்; கைகளை நீட்டி அல்லாஹ்வின் மன்னிப்பையும் கருணையையும் வேண்ட ஆரம்பித்தார்கள். இந்த நேர்மையான மனந்திரும்புதலால் தூண்டப்பட்ட அல்லாஹ், தண்டனையை நீக்கி, குடிமக்களை மன்னித்து, அவர்கள் மீது தனது ஆசீர்வாதங்களைப் பொழிந்தான்.

வானம் தெளிந்தபோது மக்கள் தங்கள் அன்பிற்குரிய நபி யூனுஸ் அல்லாஹ்வின் பாதையில் அவர்களை வழிநடத்தும் பொருட்டு பாதுகாப்பாக நினிவேவுக்குத் திரும்பி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்,

நினிவேயை விட்டு வெளியேறிய யூனுஸ் நபி தனது மக்களை விட்டு வெகுதூரம் சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு சிறிய பயணிகள் கப்பலில் ஏறினார். கப்பல் பகலில் அமைதியான நீரில் நகர்ந்தது; ஆனால் இரவு வந்தவுடன் சூறாவளி கப்பலைத் தொட்டது. கப்பலை அங்குமிங்குமாக உலுக்கியது. கடல் நீர் மெல்ல மெல்ல புகுந்து, கப்பலை மெதுவாக மூழ்க ஆரம்பித்தது. பணியாளர்களும் பயணிகளும் உயிருக்கு அஞ்சத் தொடங்கினர்.

இரவு முழுவதும் சூறாவளி தொடர்ந்ததால் கப்பலின் சுமையைக் குறைப்பதற்காக சாமான்கள் மற்றும் மற்ற அனைத்து அதிகப்படியான சுமைகளையும் தூக்கி எறியுமாறு கப்பலின் மாலுமி உத்தரவிட்டார். அறிவுறுத்தப்பட்டபடி பணியாளர்கள் கப்பலின் அதிகப்படியான சுமையை வெளியேற்றினர்; ஆனால், கப்பல் இன்னமும் கனமாக இருந்ததால் தொடர்ந்து மூழ்கிக் கொண்டிருந்தது. கேப்டனுக்கு வேறு வழியில்லை – அவர் தனது பணியாளர்கள் மற்றும் பயணிகளின் உயிரைக் காப்பாற்ற யாரோ ஒருவரின் உயிரைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் இருந்த பொதுவான நடைமுறையை செயல்படுத்தும் விதமாக பலி கொடுக்கப்படும் பயணியைத் தேர்வு செய்ய கேப்டன் சீட்டு குலுக்கிப் போட முடிவு செய்தார்.

சீட்டு போடப்பட்டு யூனுஸ் நபியின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. யூனுஸ் ஓர் இளைஞர், நேர்மையானவர், ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதை சகபயணிகள் அறிந்திருந்தனர், எனவே அவர்கள் அவரை வெளியேற்ற மறுத்து மீண்டும் சீட்டு குலுக்கிப்போடும்படி கேப்டனை வேண்டிக் கொண்டனர்.

மீண்டும் சீட்டு குலுக்கிப் போடப்பட்டது. யூனுஸின் பெயரே மீண்டும் வந்தது. யூனுஸை தூக்கி எறிய மறுத்து, “நாங்கள் யூனுஸை இழக்கப் போவதில்லை. அவர் படகில் இருப்பது எம்மீது ஆசீர்வாதம். படகில் இருக்கும் சிறந்த மனிதர் அவர்; நாங்கள் அவரை அகற்றப் போவதில்லை” என்றனர் பணியாளர்கள். எனவே அவர்கள் மூன்றாவது முறையாக சீட்டு எடுத்தார்கள், யூனுஸின் பெயரே மீண்டும்! பயணிகள் குழப்பமடைந்தனர். யூனுஸ் நபி இது அல்லாஹ்வின் தீர்ப்பு என்பதை அறிந்திருந்தார். தனது இறைவனின் அனுமதியின்றி தனது மக்களை விட்டுவிட்டு வந்ததுதான் இதற்குக் காரணம் என்பதாக உணர்ந்தார். யூனுஸ் கப்பலில் இருந்து இருண்ட கொடூரமான அலைகளுக்குள் குதித்தார்.

அல்லாஹ் கட்டளையிட்டபடி கடலில் உள்ள மிகப்பெரிய திமிங்கிலம் யூனுஸை விழுங்கியது. சுயநினைவின்றி இருந்த யூனுஸ் இருளால் சூழப்பட்டிருப்பதைக் கண்டு எழுந்தார்.

தனது கல்லறையில் தான் வந்தடைந்திருப்பதாக அவர் நம்பினார்; ஆனால் சற்று நேரத்தில் ஒன்று தெளிவானது. அவர் தனது கல்லறைக்குள் இல்லை. ஒரு பெரிய மீனின் வயிற்றுக்குள் இருப்பதை உணர்ந்தார்.

திமிங்கிலத்தின் ஆழமான வயிற்றில் இருந்த யூனுஸ் நபி அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்து, “யா அல்லாஹ், இதுவரை யாரும் உனக்கு ஸஜ்தா செய்யாத இடத்தில், ஒரு மீனின் வயிற்றில் நான் உனக்கு ஸஜ்தா செய்கிறேன்” என்று கூறினார். அல்லாஹ்வை அழைத்தார், “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. நீ பரிசுத்தமானவன். நிச்சயமாக நான் அநியாயம் செய்பவர்களில் ஒருவனாக இருந்தேன்.” (21:87) ஆழ்கடலின் உயிரினங்கள் யூனுஸின் மனமுருகும் பிரார்த்தனையைக் கேட்டு திமிங்கிலத்தைச் சுற்றி ஒன்று கூடி அல்லாஹ்வின் புகழைக் கொண்டாடின.

இரக்கமுள்ள அல்லாஹ் யூனுஸின் மனந்திரும்புதலால் பெரிதும் ஈர்க்கப்பட்டான். தனது தூதரை அருகிலுள்ள கரையில் துப்புமாறு திமிங்கிலத்திற்கு கட்டளையிட்டான். திமிங்கிலம் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அருகில் உள்ள கரைக்குச் சென்று யூனுஸை வெளியேற்றியது. திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்த அமிலங்களின் விளைவாக யூனுஸின் உடல் வீக்கமடைந்தது. சுடும் சூரியன், பலமாக வீசும் காற்று – இவற்றினால் யூனுஸுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே யூனுஸுக்கு பக்கத்தில் மீது நிழல் தரும் மரம் வளருமாறு அல்லாஹ் செய்தான். உணவும் நிழலும் அவருக்குக் கொடுக்குமாறு மரத்தைப் பணித்தான். அவரை மன்னிக்கும்படி நேர்மையான அழைப்பை யூனுஸ் விடுத்திராவிட்டால் மறுமை நாள் வரை திமிங்கிலத்தின் வயிற்றிலேயே இருந்திருக்க நேரிட்டிருக்கும் என்ற தகவலை அவருக்குத் தெரிவித்தான் அல்லாஹ்.

யூனுஸ் முழுமையாக குணமடைந்ததும், தனது பணியை முடிக்க நினிவேக்கு திரும்பினார். தனது சொந்த ஊருக்கு யூனுஸ் திரும்பி வந்ததில் நினிவே நகர மக்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர். நினிவேயின் அனைத்து மக்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். யூனுஸ் தனது மக்களுடன் சேர்ந்து தனது இறைவனுக்கு ஸஜ்தா செய்து அவருடைய அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

ரம்ஜான்போஸ்ட் – 18-3-2024

தொழுகை விரிப்பு

ஆகா ஷாஹித் அலி – ஆங்கிலத்தில் எழுதிய கஷ்மீரக் கவி. அரசியல் கவியாக இருந்தாலும், சமயம் மற்றும் கலாசாரக் கருப்பொருட்களில் இணக்கமாயிருந்தவர். அவரின் “தொழுகை விரிப்பு” என்னும் கவிதை மிகப்புகழ் பெற்றது. இஸ்லாமிய வாழ்க்கையின் அங்கமாக இருக்கும் தொழுகையைப் பற்றிய இக்கவிதையை வாசிக்கும்போது விசுவாசமும் ஆனந்தமும் நிரம்பிய மனவுணர்வுடன் தொழுகை விரிப்பில் முழங்கால்படியிட்டு இந்தக் கவிதையில் ஏறக்குறைய நாம் இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது. ​​​​​​மதக் குறிப்புகள் மற்றும் படிமங்களைப் பயன்படுத்தி தொழுகைச் சடங்கின் வீரியம் மற்றும் முக்கியத்துவத்தின் உணர்வை கவிதையினுள் உருவாக்குகிறார் ஷாஹித். தனது பாட்டிக்கு கவிதையை அர்ப்பணிக்கும் ஷாஹித், ஹஜ்ஜின் வருடாந்திர விழாவை, மக்காவுக்கான முஸ்லீம் புனிதப் பயணத்தை, சோகம் மற்றும் சோர்வு ஆகியவற்றின் தொனிகளுடன் இணைக்கிறார்.

சென்ற வருடம் இக்கவிதையை மொழிபெயர்க்க நான் எடுத்துக் கொண்ட முயற்சியை கைவிட வேண்டியதாயிற்று. இன்று மாலை கவிதையை மீண்டும் மொழியாக்கம் செய்ய முயன்றேன். முயற்சி எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறது என்பதை வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.

தொழுகை விரிப்பு

தினத் தொழுகைகளுக்கு நடுவே
அந்த ஐந்து இடைவெளிகள்

வீட்டின் பெண்கள்
காய்கறிகளினூடே
இழுக்கும் தடித்த இழைகள்

குளிர்காலத்துக்கென இலையுதிர் காலத்தில் உலரும்
இஞ்சியின் ஜெபமாலை
சலசலக்கும் மிளகாய்கள்

அந்த இடைவெளிகளில்
மடிக்கப்படும் விரிப்பு –
பாட்டி கொண்டுவந்த
வரதட்சணையின் ஒரு பகுதி –
ஆக, சாத்தானின் நிழல்
புனிதம் குலைக்காமலிருக்க –
கருஞ்சிவப்பில் நெய்த
தங்க மினாராக்களுடன் மக்கா

பின்னர் சூரியாஸ்தமன
பிரார்த்தனைக்கு அழைப்பு

வேலைக்காரர்களின் தொழுகை –
அவிழ்க்கப்பட்ட வைக்கோல் விரிப்புகளில்
அல்லது தோட்டத்தில்

கோடையில் புற்களின் மீது
பிரார்த்தனைகள் முடிய விரும்பும்
குழந்தைகள்

ஆபிரகாமுடைய
தியாகத்தின் பட்டுக்கல்லை
ஸ்பரிசித்த
பெண்களின் நெற்றிகள்

சுவர்க்கத்திலிருந்து இறங்கிய
கருப்புக் கல்லைச் சுற்றி வரும்
வெள்ளையணிந்த பக்தர்கள்

இந்த ஆண்டு என் பாட்டி
ஒரு யாத்ரீகர்
மக்காவில் அவள் அழுகிறாள்

கல்லின் திரை விலக்கப்படுகையில்
தூண்களைப் பிடித்துக்கொண்டு
அவள் அழுகிறாள்

மூலத்தை வாசிக்க : https://www.poetryfoundation.org/poems/43277/prayer-rug

Agha Shahid Ali, “Prayer Rug” from The Half-Inch Himalayas. Copyright © 1987 by Agha Shahid Ali.

Agha Shahid Ali (1949-2001)

பசித்திருந்த பேய் நண்டு

பசித்துத் திரிந்தது
பேய் நண்டு
காதலிக்காகத் தோண்டிய
மணல் மேட்டின் துளைகட்கு மீளும் தெம்பின்றி
வெகுநேரப் பட்டினியில் அயர்ந்து
வீசும் அனல் காற்றில்
மணல் மூடி படுத்துக் கிடந்தது
புழுக்கள், பிணங்கள்
எதுவுமில்லா பிரதேசத்தில்
எமை உலவ விட்டீரே
என்று உருவமிலா இறைவனிடம்
முனகிய பேய் நண்டின் கண்ணில்
யாரோ ஒருவர் நெற்றித் தழும்புடன்
சுடும் மண்ணில் தலை படிந்து
தொழுகை செய்யும் காட்சி!
மயக்கத்தில் தோன்றும் பிரமையா
கடும்பாலையின் மாயமா
சோலையோ வெகுதொலைவில்,
இங்கு வந்து மண்டியிட வந்தவர் யாரோ!
அவர் அருகில் செல்லும்
ஆர்வமெழ
உடலைத் தள்ளிக்கொண்டு நகர்ந்தது
மறைந்துவிட்டாரவர்
கண்ணில் படவில்லை
இங்கும் அங்கும் தேடிய நண்டு
களைத்துப்போய்
நின்ற இடத்தின்
மூன்றங்குல தூரத்தில்
இறந்து கிடந்த
பெரும்பூச்சியை
மொய்க்கும்
ஓர் எறும்புக்கூட்டம்
பசியாறிய பின்
இறைவன் தம்மை உலவ விட்ட
இடம் பற்றிக் குறை சொல்ல
ஏதுமில்லை என்ற புரிதலில்
மணல்மேட்டின் துளை நோக்கி
ஓடத்துவங்கிற்று
தன் தடங்களை
அந்தப் பெரும் நிலத்தில்
பதித்தவாறே

Ghost Crab Mounds

கண் திற

ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும் – எம் டி முத்துக்குமாரஸ்வாமி
தமிழ்வெளி வெளியீடு

குளிரூட்டப்பட்ட காருக்குள் மேற்கத்திய இசையில் லயித்து மதுவருந்தியபடி, பெண்ணொருத்தியின் அங்கங்களை, சிணுங்கல்களை கற்பனையில் ஏற்றிக் கொண்டு கண் மூடிப் பயணம் செய்கிறான். உமது திருச்சட்டத்தில் உள்ள அற்புதங்களை நான் காண என் கண்களைத் திற. – என்கிறது ஒரு விவிலிய வசனம். உடலின் ஒளியாகிய கண் மூடிக்கிடக்கும்போது எதைக் காணவியலும்? 

ஓட்டைக்கண்ணைத் திறந்து ஜன்னல் வழிப் பார்க்கிறபோது அவன் காணும் காட்சி அவனுள் பெரும் மாற்றத்தை உண்டாக்கிவிடுகிறது. ஜன்னல் வழி அவன் பார்க்கும் முதியவனின் முகம் அவனுடைய முகத்தை ஒத்திருக்கிறது. அவன் பார்ப்பது அவனுடைய பிரதிபலிப்பவையேவா? சில வினாடிகளுக்கு முன்னர் போதையுணர்வில் ஆழ்ந்திருந்த அவனை புரட்டிப்போடும் அந்த ஜன்னல் வழி தெரியும் உருவம் நிஜமா, அல்லது அவன் கற்பனை செய்து கொள்ளும் அவனுடைய பிரதிபலிப்பா? 

ஒரு கணத்தில் அவன் தன்னைப் பற்றிய தற்சோதனையில் ஈடுபட்டிருக்கக் கூடுமா? அதற்கான ஒரு சங்கேதமும் அந்தத் தருணத்துக்கு முன் கவிதையில் சித்திரிக்கப்படவில்லை. தீடீர் பெருமாற்றம் நிகழ ஒரு நொடி போதும் என்ற கருத்தை கவிதை சொல்ல வருகிறது என்றுதான் மேல் நோக்காகத் தோன்றுகிறது.

ஆனால், கவிதை சொல்ல வருவது அதனை மட்டுமில்லை என்பதற்கான பல வாசிப்புச் சாத்தியங்களை இக்கவிதை தன்னகத்தே கொண்டுள்ளது. 

கவிதையின் வரும் சில முக்கியக் குறிச்சொற்களைப் பார்ப்போம்.

நகரத்தின் பொறி

முகத்தின் முதிய சாயல்

அழியும் தற்போதம்

தன்னழிவு

இறுதி ஊர்வலம்

சாவு நடனம்

ஓட்டைக் கண்பார்வை

எலிப்பொறியில் சிக்கிக் கொள்ளும் எலிக்கு அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதை நினைத்து ஏற்படும் கிலியுணர்வைத் தான் நகரத்தின் பொறி நமக்குள் தோற்றுவித்துக் கொண்டே இருக்கிறது. ஓர் இருத்தலியல் சிக்கலின் குறியீடாகப் போக்குவரத்து நெரிசல் கவிதையின் ஆரம்பத்தில் நிகழ்கிறது. கார் நகராமல் அந்த நெரிசலில் காத்திருக்கும். காருக்குள்ளிருக்கும் பயணி நிலைமையின் உதவியற்ற தன்மையை மறுப்பவன் போல “ஜோஷுவா பெல்லின் வாசிப்பில் சாய்க்கோவ்ஸ்கியின் வயலின் இசையை கன்சர்ட்டோ சிங்கிள் மால்ட் விஸ்கியுடன்” உள்ளிறக்கிக் கொண்டிருக்கிறான்.

கார் ஜன்னலுக்கப்புறம் தீடீரென்று வெகுஅருகே வந்து உள்ளே நோக்கும் உருவங்கள் பொதுவாகவே திடுக்கிட வைக்கும். இங்கோ இசையும், மதுவும் பெண் சிந்தனையும் அளைய ஓட்டைக் கண் திறந்து பார்த்தவுடன் தோன்றும் திடுக்கிடல் தடாலென அவனுள் மாற்றத்தை நிகழ்த்திவிடுகிறது. அவன் பார்க்கும் கிழ உருவம் அவனுடய முகத்தின் முதிய சாயல் என்பதாக இருந்தது என்ற குறிப்பு கவிதையில் உள்ளது. யாசகம் செய்யும் பிச்சைக்காரக் கிழவனுடனான உருவ ஒற்றுமையாக அதைப் பார்த்தாலும், மதுவின் போதையில் ஆழ்ந்திருந்தவன் ஓட்டைக் கண்ணைத் திறந்து புறம் நோக்கினானா, அல்லது தன்னுள் நோக்கினானா?

ஒருவனுடைய தற்போதம், அதாவது தன்னினைவு அல்லது ஆணவம் எப்போது அழியும்? போதையுணர்வில் அவனுடைய தற்போதம் நீங்க வாய்ப்பு உண்டெனினும், அப்போதையுணர்விலிருந்து அவன் நீங்க அவனுக்கு மனம் வந்திருக்குமா என்பது சந்தேகம். அழியும் தற்போதம் அகத்தினுள் தன்னுடைய முகத்தின் முதிய சாயலைத் தரிசித்ததனால் விளைந்தது என்பதாகப் பொருள் கொள்ள கவிதை வாய்ப்பளிக்கிறது.

தன்னழிவு என்றால் என்ன? பொதுவாக எதிர்மறைச் சொல்லாக கருதப்படும் பதம் – தன்னழிவு. தற்கொலை, தீக்குளிப்பு முதலான செயல்கள், சுயவதை என்பன போன்றவற்றைத் தன்னழிவு என்ற சொல்லால் குறிப்பர். இக்கவிதையில் சுயத்தின் அழிவு என்பதான அர்த்தத்தில் வாசிக்க இடமிருக்கிறது. மேட்டிமை அடையாளங்களை உடனடியாக இழந்து (யாரோ ஒருவரின்) இறுதி ஊர்வலத்தில் அவன் தன்னை மறந்து நாக்கைத் துருத்திக் கொண்டு சாவு நடனம் ஆடியதில் அவன் இழந்தது எதை? அந்தத் தன்னழிவு தன்னை அழித்துக் கொண்டதைக் குறிக்கிறதா? அல்லது சுயத்தின் அழிப்பைக் குறிக்கிறதா?

“உள், அகநிலை சுயம் மற்றும் வெளி உலகிற்கு இடையே”யான பாலமாக நீண்ட காலமாகவே கண்களைக் கருப்பொருளாகக் கொண்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.  கவனம், உண்மை, தெளிவு, ஒளி, பார்வை, தீர்க்கதரிசனம், விழிப்புணர்வு மற்றும் அவதானிப்பு ஆகிய    கருத்துக்களை நனவில் பரப்பும் கற்பனையைத் தூண்டுவதற்கு முயற்சிக்கும் கலைஞர்களுக்கு கண் ஒரு சரியான அடையாளமாகத் திகழ்கிறது. “பொய்க் கண்ணாடி” என்ற மிகப் புகழ் பெற்ற கண்ணோவியம் ஒன்று உண்டு.  ஓர் உயிர்ப்பில்லா கண். அதற்கு புருவமில்லை. அதன் கண்மணி கடுங்கருப்பு நிறத்தில் இருக்கிறது. அதற்கு மாறாக கருவிழி மேகம் பரவிய நீல வானம். உயிர்ப்பற்ற ஒரு கண்ணில் சுதந்திர வானம் தெரிந்தாலும் அதை ரசிக்கவோ உத்வேகம் கொள்ளவோ முடியுமா?  முதல் உலகப் போரை அசை போடும் ஓவியர் போரில் சிக்கிய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த பார்வையாளனின் உயிரற்ற சித்தரிப்பைப் பயன் படுத்திக் கொள்ளுகிறார். பயத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாளை அந்தக் கண் நோக்கும்போதும் அது உயிரற்றுக் கிடக்கிறது. 

ஜன்னலில் தெரிந்த அவனுடைய முகத்தின் முதிய சாயல் கொண்ட உருவம் வெறித்து நோக்கிய இவனுடைய கண் பொய்க்கண்ணாடியா? ஓட்டைக் கண் திறந்ததும் பொறியிலிருந்து தப்பி சுதந்திரமாக ஓடும் எலி போல சாவின் நடனத்தில் பங்கு பெறுகிறான் காரில் இருந்தவன். இம்மாறுதல் அவன் கார் ஜன்னல் வழி ஒட்டைக் கண் திறந்ததனால் சாத்தியமாயிற்று. இருத்தலியல் பயம் படிந்து உயிர்ப்பில்லாத மூடிய ஓட்டைக் கண் பார்வை சற்று திறந்ததும் அங்குமிங்கும் மேகம் பரவிய நீல வானத்தின் உண்மையான தரிசனம் கிட்டி வாழ்வின் உயிர்ப்பைத் தழுவிக் கொள்ளும் முயற்சியில் இறங்கினான் காருக்குள்ளிருந்தவன். அடுத்தவரின் இறப்பில் கலந்துகொண்டு சாவு நடனம் ஆடுகிறான். மேற்கத்திய இசை, வசதி, பெண் சுகம் – இவ்வனைத்தும் தப்பித்தல்கள். வாழ்வின் நிகழ்வில் முழுமையாக இருத்தலே இருத்தலியல் தவிப்பின் உண்மையான ஆற்றுப்படுத்தல்கள் என்று Moral of the story பாணியில் எழுதி விடுதல் போல இக்குறிப்பை முடித்துவிடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், கவிதையின் அர்த்த அடுக்கை மேலும் விரிவாக்குகிறது இன்னுமொரு வினா. நெரிசல் மிக்க சாலையில் இறப்பு ஊர்வலம் செல்கிறது. யாசகம் கேட்கும் முதியவர் கார் ஜன்னலைத் தட்டிப் பிச்சை கேட்பது போல் இருக்கிறது. ஆனால் அம்முதியவர் காருக்குள்ளிருக்கும் இவனை வெளியே அழைப்பது போலவும் உடன் அவர் அழைப்பை ஏற்று அவன் வெளிச் சென்றது போலவும் உள்ளது. இறுதி ஊர்வலத்தில் செல்லும் பிணம், இவன் முகத்தின் சாயல் கொண்ட அந்த முதியவர், காருக்குள் இருந்து இறங்கி சாவு நடனமாடும் இவன் – மூவரும் ஒருவரோ?

தீயை நோக்குதல்

திருநெடுங்கோதை – தொகுப்பிலிருந்து – பரமேசுவரி – யாவரும் பதிப்பகம்

உணர்வு, மாற்றம், அழிவு, புதுப்பித்தல் முதலான கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்த, இலக்கிய நடைமுறைகளில் நெருப்பு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. கருப்பொருளாக உவமையாக நெருப்பு பன்னெடுங்காலமாக கவிதைகளில் உலவி வந்திருக்கிறது. சமய இலக்கியங்களிலும் நெருப்பு முக்கியமான அந்தஸ்தைக் கொண்டிருந்தது.

ரிக் வேதத்தில் வரும் ஒரு துதிப்பாடலில் இப்படி வருகிறது : 

“யாகங்களின் பிரதான ஆசாரியனும், தெய்வீகமானவனும், பூசாரியாக காணிக்கைகளை  (தெய்வங்களுக்கு) சமர்ப்பிப்பவனும், பெரும் செல்வத்தை உடையவனுமான அக்னியை ஏத்துகிறேன்.”

வேத உபடநிடதங்களை மொழியாக்கம் செய்ய முயன்ற பாரதியார் அதற்கென வகுத்துக்கொண்ட வடிவத்தை வசனகவிதை என்று அழைத்தார். தீயைப் பற்றிய ஒரு வசன கவிதையில் விரிவான அக்னி சடங்கில் இடப்படுவனவற்றை குறிப்பிட்டு நன்கு எரியுமாறு தீக்குப் பணிக்கிறார்.  

தீயின் இயல்பே ஒளி. 

தீ எரிக. 

அதனிடத்தே நெய் பொழிகின்றோம். 

தீ எரிக. 

அதனிடத்தே தசை பொழிகின்றோம். 

தீ எரிக

அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம் 

தீ எரிக. 

அதற்கு வேள்வி செய்கின்றோம். 

தீ எரிக. 

வைதீக சமயத்தின் தீ வேள்விகளை தினமும் புரியும் ஆயிரம் பிராமணர்களை பௌத்த நெறியைத் தழுவ வைத்த பிறகு அவர்களுக்கு என்ன போதிப்பது என்று யோசித்த ததாகதர் அவர்களின் வேள்வித்தீயையே கருப்பொருளாக வைத்து புத்ததம்மத்தை விளக்குகிறார். அவரின் ஞானக்கண்ணில் சம்சார உலகே தீப்பிடித்து எரிகிறது. எரிவதை ஞானப்பார்வையில் நோக்கி சம்சார உலகின் இயல்பை விவரிக்கும் “ஆதித்த பரியாய சுத்தத்தை”க் கூறுகிறார். இது பாலி நெறிமுறையின் மிக முக்கியமான சுத்தம். இந்த சுத்தத்தின் வரிகளைத் தம் புகழ்பெற்ற கவிதையில் குறிப்பாகப் பயன்படுத்தும் கவிஞர் டி எஸ் எலியட் – கிறித்துவத்தின் மலைப் பிரசங்கத்துக்கு ஒப்பானது – என்கிறார்.

“துறவிகளே, அனைத்தும் எரிகின்றன. என்னவெல்லாம் எரிகின்றன? கண் எரிகிறது. வடிவங்கள் எரிகின்றன. கண்ணின் உணர்வு எரிகிறது. கண்களின் தொடர்பு எரிகிறது. மேலும் கண்ணில் உள்ள தொடர்பைச் சார்ந்து எழுவது எதுவாக இருந்தாலும் – இன்பமாகவோ, துன்பமாகவோ அல்லது இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ – அதுவும் எரிகிறது, எதில் எரிகிறது கண்? மோக நெருப்பால், வெறுப்பின் நெருப்பால், மாயையின் நெருப்பால்,  நான் உங்களுக்குச் சொல்வது,  பிறப்பின், முதுமையின்,  மரணத்தின், துக்கங்களின், புலம்பல்களின், வலிகளின், துயரங்களின் மற்றும் விரக்திகளின் நெருப்பால்.

“காது எரிகிறது, ஒலிகள் எரிகின்றன …

“மூக்கு எரிகிறது, நறுமணம் எரிகிறது …

“நாக்கு எரிகிறது, சுவைகள் எரிகின்றன …

“உடல் எரிகிறது, தொட்டுணரக்கூடிய உணர்வுகள் எரிகின்றன …

“புத்தி எரியும். யோசனைகள் எரியும். புத்தியில் உணர்வு எரியும். புத்தியில் தொடர்பு எரியும். மேலும் புத்தியின் தொடர்பைச் சார்ந்து எழும் அனைத்தும் – இன்பமாகவோ, துன்பமாகவோ அல்லது இன்பமாகவோ இல்லை. வலி – அதுவும் எரியும், எதில் எரிகிறது? பேரார்வத்தின் நெருப்பால், வெறுப்பின் நெருப்பால், மாயையின் நெருப்பால், நான் உங்களுக்குச் சொல்வது,  பிறப்பின், முதுமையின்,  மரணத்தின், துக்கங்களின், புலம்பல்களின், வலிகளின், துயரங்களின் மற்றும் விரக்திகளின் நெருப்பால்.”

நோக்குமிடமெல்லாம் தீ! எனவே தான், பட்டினத்தார் பாடுகிறார் :-

முன்னை இட்ட தீ முப்புரத்திலே 

பின்னை இட்ட தீ தென் இலங்கையில் 

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே 

யானும் இட்ட தீ மூள்க மூள்கவே 

எப்போதெல்லாம் எரியும் நெருப்பு நோக்கப்படுகிறது?  – சமைக்கையில், கொண்டாட்டகாலங்களில் ஏற்றப்படும் விளக்குகளில், முகாம்களில் பற்றவைக்கப்படும் கேம்ப் பயர்-களில், குளிரின்போது வாழ்விடங்களை  வெம்மைப்படுத்த தீ மூட்டப்படுகையில், உலோகத்தை உருக்குதல் போன்ற தொழில் துறை செய்முறைகளில், மதநிகழ்வுகளில் செய்யப்படும் சடங்குகளில், பண்டிகைக்கால ஒளிக்காட்சிகளில், காட்டுத்தீ முதலான விபத்துகளில், தீப்பந்தங்களில் – இது போன்று பல்வேறு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு சூழல்களில் நெருப்பு கவனிக்கப்படுகிறது. 

பக்தியுடன் அல்லது பயத்துடன் அல்லது பற்றற்று பார்க்கப்படும் தீ போலில்லை – கவிஞர் பரமேசுவரி “தீயின் அழிபசி” கவிதையில் வரும் தீ. கவிதைசொல்லி தீயை ஓர் அழகான பொருளைப் பார்ப்பது போல ரசிக்கிறார். அழகின் நிமித்தம் தீயை நோக்குவது ஒரு புதுக்கூறு. 

கவிதை சொல்லி வீட்டின் கூரையில் அவராகவே தீ வைத்துவிட்டு அது எரிவதை ரசனையுடன் நோக்கிக் கொண்டிருக்கிறார். “நான் அங்கேதான் அமர்ந்திருக்கிறேன்” என்று சொல்கிறார். முதலில் அதை வாசித்தபோது தற்கொலை நிகழ்வை மரணத்தை விருப்பத்துடன் தழுவிக் கொள்ளும் முயற்சி போலத் தொனிக்கிறது, ஆனால், நல்ல வேளை “ஓரமாய் அமர்ந்து” எனப் பின்வரும் வரிகளில் குறிப்பிட்டுவிட்டதால், தற்கொலை இல்லை என்று நிம்மதியடைகிறோம். 

‘ஒன்றைப்பற்றி ஒன்று 

மெல்ல மெல்ல மேலேறிக் 

கவ்வும் அழகை வியந்திருந்தேன்”

ஒரு கை இன்னொரு கையைப் பற்றி மேலேறும் நூறு கைகளின் நடனம்!

கொழுந்துகளின் நாட்டியம், அழலின் ஆட்டம், தழலின் வெப்பம் – அனைத்தையும் கண்ணெடுக்காது ரசிக்கிறார் கவிதைசொல்லி – தழலின் வெப்பத்தை எப்படி கண்ணால் காண முடியும் என்ற கேள்வி எழுகிறது. உணரத்தானே முடியும்!

தழல் அடங்கிவிடுகிறது. கவிதைசொல்லி அங்கிருந்து நகர்வதாயில்லை. ஒன்றும் இலாமல் அனைத்தையும் தின்று தீர்த்த தீயின் பசி அத்தனை அழகாயிருந்ததாம்!

பரமேசுவரியின் இந்தக் கவிதையை வாசித்த பிறகு ராபர்ட் ப்ராஸ்ட் எழுதிய புகழ் பெற்ற ஆங்கிலக் கவிதை – தீயும் பனியும் ஞாபகத்துக்கு வந்தது. உலகம் அழியப்போகும் நாளை அக்கவிதையில் கற்பனை செய்கிறார் கவிஞர். உலகம் தீயால் அழியும் என்று சிலர் எண்ணுகின்றனர். வேறு சிலரோ பனியால் அழியும் இவ்வுலகு என்கின்றனர். ஆசைகளைச் சுவைத்தவன் என்பதால் தீயால் அழியும் என்பவர் கட்சியில் தானிருப்பதாகச் சொல்கிறார் கவிதைசொல்லி. ஆனால் இவ்வுலகம் இருமுறை அழியும் என்றிருக்குமானால் போதுமான அளவுக்கு வெறுப்பு பற்றி அறிந்தவன் என்பதால் பனியினால் இவ்வுலகம் அழிவதும் பொருத்தமாக இருக்கும் என்கிறார் கவிதைசொல்லி. ஆசையை நெருப்பாக உவமிக்கும் ராபர்ட் ப்ராஸ்ட் போலவே எண்ணற்ற கவிஞர்கள் தீயை ஆசைக்கு உருவகமாக்கியிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்திலும் இதற்கு உதாரணம் உண்டு.

அற்புதத் திருவந்தாதியில் சிவ பெருமான் இருக்கும் இடமாக காரைக்காலம்மையார் சொல்லும் சுடுகாட்டில் ஒரு பேய் இருந்தது. அதனால் சிவனேயென்று இருக்க முடியவில்லை.  ஒரு கள்ளிப் புதரின் நடுவில் படுத்துக் கொண்டிருந்த பேய் சும்மா இராமல், எரிகின்ற சிதைக்கட்டையை எடுத்து அதில் படிந்திருந்த மையை எடுத்து கண்ணில் மையாகப் பூசி அழகாக உணர்ந்தது. சில வினாடிகள் தாம்! சிதைக்கட்டையின் தீப்பொறி அதன் கண்ணில் பட்டுவிடுகிறது. சூடு பொறுக்க முடியாமல் சினக்கிறது. சத்தம் போட்டு அலறுகிறது. அங்கும் இங்கும் துள்ளிக் குதிக்கிறது. தீயை அணைக்க முயல்கிறது. இத்தகைய காட்டில் இருக்கிறானாம் எம்பெருமான் என்கிறார் காரைக்காலம்மையார். ​​ 

யார் அந்த பேய் ? ஆசையுள்ளோர் அந்தப் பேய். இந்த உலகம் தான் சுடுகாடு. ஒவ்வோர் ஆசையும் ஒவ்வொரு கொள்ளிக் கட்டை. அனுபவிக்கும் போது முதலில் கொஞ்ச நேரம் இனிமையாக இருக்கும். அப்புறம், சூடு தாங்காமல் எரியும். எதை வேண்டும் என்று எடுத்தோமோ அதையே வேண்டாம் என்று தூக்கி ஏறிய நினைக்கிறோம்.

கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக்

கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை

விள்ளவெழுதி வெடுவெடென்ன

நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத்

துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச்சுட்டிட 

முற்றுஞ் சுளிந்து பூழ்தி

அள்ளி அவிக்க நின்றாடும்

எங்கள்அப்பனிடந் திரு ஆலங்காடே

“தீயின் அழிபசி” கவிதையில் வரும் கவிதைசொல்லி பதற்றமோ சினமோ கொள்ளவில்லை. மாறாக, அமைதியாய் தீ எரிவதை நோக்குகிறார். அவரே சொல்வது போல அது “அத்தனை அழகாக இருந்தது”. எரிந்து போனது அவர் வாழ்ந்த வீடாகக்கூட இருந்திருக்கலாம்! அவருடைய உடமைகள் எல்லாம் அழிந்து போயிருக்கலாம். ஆதித்த பரியாய சுத்தத்தில் புத்தர் விளக்கிய சம்சார உலகின் வெறுமையை உணர்ந்து அமைதிக்குள் புகுந்த தேரியின் மனநிலையை கவிதைசொல்லி “தீயின் அழிபசி” கவிதையில் பிரதிபலிப்பதாக நாம் வாசிக்கலாம். தேரிகதாவில் தேரி ஸுஜாதா கூறுவது போல் –

தூசியற்ற, மரணமில்லாத,

உண்மையான தர்மத்தை அறிந்து,

நான் வெளியே சென்றேன்,

வீட்டிலிருந்து விலகி வீடற்றவள் ஆனேன்.

வேகத்தின் சாட்சி – உள்ளே வெளியே

கவிஞர் ஆனந்த் அவர்களின் முழுக் கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பாக சமீபத்தில் வெளி வந்தது. தலைப்பு சுவாரஸ்யமோ அல்லத்ய் முகப்பின் அழகான புகைப்படமோ – எதுவெனத் தெரியவில்லை – புத்தகம் என்னை ஈர்த்தது. ஆன்மீகத் தத்துவ தொனி தூவிய அவரது “சுற்றுவழிப்பாதை” நாவலை இதற்கு முன்னர் வாசித்துள்ளேன். அனேகமாக அவரது கவிதைத் தொகுப்பில் நிறைய ஆன்மீக கருப்பொருளில் எழுதப்பட்ட கவிதைகள் இருக்கும் என்பது ஊகம் (எதிர்பார்ப்பும் கூட, இப்போது வரும் கவிதைத் தொகுதிகளில் ஆன்மீக கருப்பொருள் அதிகம் வாசிக்கக் கிடைப்பதில்லை என்பது ஒரு குறை!).

350 பக்கங்கள் கொண்ட நூலில் ஏராளமான கவிதைகள். புத்தகம் வந்தடைந்ததும் இயைபின்றி ஒரு கவிதையை எடுத்து வாசித்தேன்.

வேகம்

பூமியைப் பிளந்து

வெடித்துச் சிதறி

வான் நோக்கிப் பாய்கிறது

தென்னை மரம்

உச்சியில் நாற்புறமும்

மட்டையும் ஓலையுமாய்

பீய்ச்சி அடிக்கிறது

சொட்டுச்சொட்டாய்

துளிர்த்து உடன்

வளர்கின்றன 

தேங்காய்க் குலைகள்

மலைகளும் மடுக்களும்

கண்ணெதிரெ உருவாகும்

கதி மாறிய உலகில்

உள்ளே சுற்றுமுற்றும்

பார்த்து வியந்து நிற்கிறேன்

என்னை மட்டும்

காணவில்லை

(“ வானம் கீழிறங்கும்போது”, காலச்சுவடு பதிப்பகம், ஆசிரியர்: ஆனந்த்)

ஆறு நாட்களில் இறைவன் பிரபஞ்சத்தை உண்டு பண்ணின விவிலியத் தொன்மத்தில் எல்லாம் வேகவேகமாக உருவாக்கப்பட்டிருக்கும். பிரபஞ்சம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிற நாட்களில் மரங்கள் நிமிஷக்கணக்கில் வளர்ந்து மலர் பூத்து கனி விளைக்கும் மரஙளின் காட்சியை மானிடன் ஒருவன் பார்த்திருப்பானே ஆயின் அவன் வியந்திருப்பானா? மனிதனும் பிரபஞ்சத்தின் பங்கேற்பாளர்களில் ஒருவனாக மட்டும் படைக்கப்பட்டிருப்பானெனில், வியப்புணர்வுக்கு இடம் இருந்திருக்காது. வியப்புணர்வுக்கு இடம் இருந்ததெனில் பிரபஞ்சத்தின் பார்வையாளனாக, உற்று நோக்குபவனாக அவனுக்கொரு பாத்திரம் தரப்பட்டிருப்பதாகக் கருதலாம். பிரபஞ்சமும் மனிதனும் ஒரே நேரத்தில் உருவாயினரா என்பது வேறு கேள்வி. பரிணாமவியலும் சமயத் தொன்மங்களும் இக்கேள்விக்கு வெவ்வேறு விதங்களில் விடையளிக்கும்.

விடுவிடென்று நிமிடங்களில் வளர்ந்து கனி குலைக்கும் மரம் – ஸ்ராவஸ்தியில் புத்தர் செய்த அற்புதங்களில் ஒன்று – இது போன்ற ஒரு தென்னை மரம் “வேகம்” கவிதையில் வருகிறது. கவிதைசொல்லி வேகவேகமாக வளரும் தென்னை மரத்தைப் பார்ப்பதாகச் சொல்கிறான். கவிதைக்காட்சிக்குள் பங்கேற்பவனாக கவிதைசொல்லியைப் பார்த்தால் அவன் ஒரு சாட்சி. கவிதைக்காட்சிக்கு வெளியே நின்று அந்தக் காட்சியை வெறும் விவரிப்பவனாக கவிதைசொல்லி இருந்தால் கவிதைக்காட்சிக்குள் அவன் இருக்க மாட்டான். கவிதைக்காட்சியைத் தன் மனதுக்குள் சிருஷ்டித்து அதை அவன் தெரியப்படுத்தும் போது அந்தக் கவிதைக்காட்சி அவனுக்குள்ளேயே இருக்கிறது.

பங்கேற்பவன் எப்படி சாட்சியாக முடியும்? சாட்சி என்பது உணர்வு நிலை. “நான் இக்காட்சியில், நிகழ்வில் பங்கு பெறுகிறேன்” என்று சொல்லிக் கொள்வது உணர்வு நிலையிலிருந்து எழுவது. பங்கேற்கும் காட்சியில் இருந்துகொண்டே சாட்சியாக இருக்கும் வசதியை நம் உணர்வு நிலை நமக்குத் தருகிறது.

கவிதையின் தலைப்பு “வேகம்”. வேகம் என்பது காலத்தோடு தொடர்புள்ளது. குறைந்த காலத்தில் அதிக இயக்கம் நிகழ்ந்தால் அதிக வேகம். காலம் என்ற ஒன்று பிரபஞ்ச வடிவம் நம் மேல் நிகழ்த்தும் நையாண்டியாக இருக்கலாம் என்று நியூட்டனிய இயற்பியலுக்குப் பின் வந்த இயற்பியல் முன்னேற்றங்களிலிருந்து நாம் அனுமானித்துவிடலாம். நேரம் முழுமையானது அல்ல, அது ஒரு சார்பியல் கோட்பாடு. வெவ்வேறு பார்வையாளர்களுக்கு அவர்களின் ஒப்பீட்டு இயக்கத்தைப் பொறுத்து மாறுபடும் தன்மையுடையது.

கவிதையின் இறுதியில் வியப்பின் உச்சியில் அங்கு தான் இல்லை என்று கவிதை சொல்லி அறிவிக்கும் போது அதை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.

ஒன்று – ஒரு மரம் வளர்ந்து காய்கனிகள் விளைக்கும் காலத்தை விட மலைகளும் மடுவும் தோன்ற அதிக காலம் பிடித்திருக்கும் என்று தர்க்க ரீதியாக அனுமானிக்க முடியும். மனிதன் வளரும் வேகம் அவன் ஆயுட்காலம். ஒரு மரமோ, மடுவோ, மலையோ வாழும் காலத்துடன் ஒப்பு நோக்கினால் மனிதனின் ஆயுட்காலம் குறைவு. “மலைகளும் மடுக்களும் கண்ணெதிரே உருவாகும் கதிமாறிய உலகில்” அவை உருவாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் “கவிதைசொல்லியாகிய” மனிதனும் நொடியின் சிறு பகுதியில் உருவாகி மறைந்திருப்பான். எனவே, அவன் இக்கவிதையில் அவன் காணப்பட மாட்டான்.

இரண்டு – கவிதைசொல்லி கவிதைக்கு வெளியே இருப்பானாயின் கவிதைக்காட்சியை அவன் தன் கற்பனையில் சிந்தித்திருக்கிறான் என்று கொள்ளலாமல்லவா?. வெளியே இருந்து கவிதைக்காட்சியை அவன் பார்த்து ஒரு சாட்சியாக “வேகத்தை” ரிப்போர்ட் செய்கிறான் எனில், அவன் பங்கேற்பாளனாக இருக்க முடியாது. 

கவிதை ஒரு துணைக்கருத்தையும் நிகழ்த்திக் காட்டுகிறது. வேகமாகத் தோன்றும் மரம், மலை, மடு – கவிதையின் ஒற்றைப் படிமம் – பௌத்தத்தின் மூலக்கருத்தான – பாய்வுத்தன்மையில் மாற்றங்களின் குவியலாக இருக்கும் இப்பிரபஞ்சத்தின் தன்மையை பிரதிபலிக்கிறது.

பங்கேற்கும் சாட்சிக்கும், காட்சிக்கு வெளியே இருக்கும் சாட்சிக்கும் இடையிலான ஒப்புநோக்கல் கவிதைக்கு புதிர்த்தன்மையை ஈந்து, தத்துவ ஆழத்தை நல்கி இக்கவிதை மீதான வாசகனின் தொடர்-ஈடுபாட்டுக்கான வாயிலாகவும் இருக்கிறது.